மலரினும் மெல்லியது காமம் 3

gavudham

Administrator
Staff member
Jan 14, 2025
109
1
18
புவனா கதவைத் திறக்க அரவிந்த் உள்ளே நுழைந்தான். நன்றாகக் குடித்திருந்தான்.

புவனா ஒன்றும் சொல்லாமல் பார்த்தாள்.

“சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா?”

“வேண்டாம்”

“சாப்பிட்டீங்களா?”

“உனக்கு ஒரு தடவ சொன்னா புரியாதா?”

கேட்டபடி உள்ளே சென்றவன் கட்டிலில் படுத்தான். கொஞ்ச நேரத்தில் தூங்கிவிட்டான்.

புவனாவிற்கு போரடித்தது. என்ன செய்யலாம் என்று யோசித்தாள்.

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்த்தாள். ஏதோ ஒரு மெசேஜ் வந்தது.

“ஹலோ”

“பேசுங்க ப்ளீஸ்”

யாரோ மெசேஜ் அனுப்பியிருக்க புவனா யோசித்தாள்.

பேசலாமா ?

வேண்டாம் எதற்கு வம்பு ?

பேசுவதால் என்ன ஆகிவிடப் போகிறது?

எதற்கு பேச வேண்டும்?

சும்மாத்தான்.

பேச வேண்டாம். விபரீதம் ஆகிவிடும். ஏதாவது சிக்கல் என்றால் உனக்குத்தான் தொந்தரவு.

பேசுவதால் என்ன தொந்தரவாகிவிடப் போகிறது? நான் தான் என் மொபைல் நம்பர் ஒன்றும் தர மாட்டேனே?

அப்படியா சொல்கிறாய்?

ம்

சரி உன் விருப்பம் ஆனால் கவனமாக இரு.

சரி

தன் மனசாட்சியை சமாதானப்படுத்தி முகம் தெரியாத அந்த நபருக்கு பதில் தந்தாள்.

“ஹாய்”

“தேங்க்ஸ் பார் ரிப்ளை”

“ம்”

“என்ன பண்றீங்க?”

“ஹவுஸ் வைஃப்”

“வாவ்”

இதற்கு எதற்கு வாவ் சொல்கிறான் என்று புவனாவிற்கு சத்தியமாக புரியவில்லை.

ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.

“என்னப் பத்தி எதுவுமே கேட்க மாட்டீங்களா?”

அந்த மெசேஜைப் பார்த்தவள் சொல்லுங்க என்று டைப் செய்தாள்.

“நான் சந்தோஷ். வயசு 24 . மதுரை”

அதைப் பார்த்த புவனா அமைதியாக இருக்க அவனே மீண்டும் கேட்டான்.

“உங்களப் பத்தி சொல்ல மாட்டீங்களா?”

“என்ன சொல்லணும்?”

“உங்க பேர் வயசு நீங்க எந்த ஊர்?”

“அது எதுக்கு உங்களுக்கு ?”

அவன் அந்த கேள்வியை எதிர்பார்த்திருக்க மாட்டான் போல்.

“வ்வாட்…?” என்றான்.

புவனா கண்டு கொள்ளவில்லை.

“நாம ஃபிரண்ட்ஸ்” என்றான்.

“எப்படி?”

“பிரண்ட்ஸ் ஆகப்போறோம்”

“சரி”

“அப்ப நாம ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சுக்கணும் இல்லையா?”

“கரெக்ட்தான்”

“அதான் கேட்டேன் உங்க பேர் வயசு ஊர்?”

“என்னோட பேர் என்னன்னு தெரியாம என்னோட வயசு என்னன்னு தெரியாம நான் எந்த ஊருன்னு தெரியாம உங்களால என் கூட ஃப்ரெண்ட்ஷிப் வச்சுக்க முடியாதுன்னு சொல்றீங்களா?”

புவனா கேட்க மறுமனையில் சற்று நேரம் பதில் இல்லை. கொஞ்ச நேரம் கழித்து சொன்னான்.

“நான் பிராக்டிகல்”

“அப்படின்னா என்ன சொல்ல வரீங்க?”

“மனசுல ஒண்ணு வச்சுக்கிட்டு வெளில ஒண்ணுன்னு பேச மாட்டேன்”

“சரி”

“எனக்கு உங்க கூட பேசறது பிடிச்சிருக்கு”

அவன் சொல்ல புவனாவிற்கு சிரிப்பு வந்தது.

நான் யார் என்றே தெரியாது. என்னை இவன் பார்த்ததும் இல்லை. என்னிடம் இப்பொழுது தான் பேச ஆரம்பித்திருக்கிறான். முழுவதுமாக இன்னும் பத்து நிமிடம் கூட ஆகவில்லை. அதற்குள் நான் பேசுவது பிடித்திருக்கிறதாம். இவன் உத்தேசம் என்னவென்று எனக்குத் தெரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறான் போல்.

எனக்கு இவனைப் போன்ற ஆண்கள் மீது வெறுப்பு வந்தது. இவர்களுக்கு எல்லாம் யார் என்ன என்று எதுவும் தேவையில்லை. கூட படுப்பதற்கு யாராவது ஒருவர் வேண்டும். அவர் எந்த வயதினராகவும் இருக்கலாம் எங்கிருந்து வேண்டுமானாலும் இருக்கலாம்.

யோசித்த புவனா சற்று நேரம் மெசேஜ் ஒன்றும் செய்யாமல் அமைதியாக இருந்தாள்.

அவள் எதிர்பார்த்தது போல அவன் மறுமுனையில் பதறினான்.

“ஹலோ”

“ஹலோ”

“இருக்கீங்களா?”

“பேசுங்க ப்ளீஸ்”

கெஞ்சினான்.

ஆண்மை என்றால் அதில் ஆளுமை இருக்க வேண்டும். ஆளுமை இல்லாத ஆண்கள் இப்படித்தான் தங்களுக்கான மரியாதையை விட்டு கெஞ்சுவார்கள். காதலியிடமோ தாங்கள் நேசிப்பவர்களிடமோ கெஞ்சும் ஆண்கள் இவ்வகையினர் அல்ல.

காமத்திற்காக கெஞ்சுகிறான். இப்படி கெஞ்சினால் அந்தப்பெண் என்ன நினைப்பாள் எப்படி மதிப்பாள் என்பதைப்பற்றி சற்றும் எண்ணிப் பார்க்காத ஒரு அறிவிலி இவன்.

இப்படி கெஞ்சுபவன் எப்பொழுதும் கெஞ்ச மாட்டான். ஒருவேளை அவன் கெஞ்சியும் அவனுடைய நோக்கம் நிறைவேறவில்லை அல்லது நிறைவேறாது என்று தெரிந்தால் உடனே எடுத்தெறிந்து பேசுவான். இழிவு படுத்துவான். கெஞ்சுவதற்கும் யோசிக்க மாட்டான். இழிவு படுத்துவதற்கும் யோசிக்க மாட்டான். இப்படிப்பட்ட ஆண்களிடமிருந்து பெண்கள் தள்ளி இருப்பதே மேல்.

புவனா தன் மௌனத்தைத் தொடர்ந்தாள். அவனுக்கு ஆத்திரமானது.

“உங்களுக்கு மேனர்ஸ் இருக்கா?” கேட்டான். புவனா அதற்கும் பதில் சொல்லாமல் மௌனம் காத்தாள்.

“ஹலோ நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் எங்க போனீங்க?”

“ஹலோ “

“இருக்கியா?”

“இடியட்”

“ஸாரி கோவத்துல சொல்லிட்டேன் எனக்கு கோவம் கொஞ்சம் ஜாஸ்தியா வரும். ப்ளீஸ் வாங்க பேசுங்க”

எதற்கும் பதில் கொடுக்காமல் புவனா அமைதியாக இருக்க அவன் வெறுத்துப் போயிருப்பான் என்று மட்டும் தெரிந்தது.

இன்ஸ்டாகிராமிலிருந்து வெளியே வந்த புவனா மொபைலை ஓரமாக வைத்துவிட்டு அரவிந்த் எழுந்து விட்டானா என்று பார்ப்பதற்காக உள்ளே சென்று பார்க்க அவன் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான்.

ஏதாவது கதை படித்தால் என்ன என்று தோன்றியது.

கதைகள் படிக்க ஒரு ஆப்பை இன்ஸ்டால் செய்திருந்தாள். அந்த செயலியும் சில கதைகளை ப்ரொமோட் செய்ய அதில் ஒன்றைப் படிக்க ஆரம்பித்தாள். முதல் எபிசோட் படிக்கும்போதே அந்த கதை ஒரு அபத்தத்தின் உச்சம் என்பது தெரிந்தது. ஒரு ரவுடி அனைவரையும் கட்டுப்படுத்துகிறான் அதாவது காவல்துறையையும் கட்டுப்படுத்துகிறான் ஆனால் அத்தகைய ஒரு ரவுடி ஒரு பெண்ணிடம் எப்படி அடங்குகிறான் என்பதுதான் கதை. அதுவும் அந்த பெண்ணை முதலில் கற்பழித்து பிறகு கற்பழித்தது தவறு என்பதை உணர்ந்து ..என்று கதை போகும் என்பதை அறிந்து அவளுக்கு அந்த கதை எழுதிய எழுத்தாளர் முகத்தில் காறி உமிழத் தோன்றியது. அதுவும் அந்த செயலை பெண்களுக்கு பிடித்த கதை என்று அதை விளம்பரப்படுத்தியதைப் பார்க்க அவளுக்கு எரிச்சலாக வந்தது.

இப்படிப்பட்ட கதைகளை எழுதும் எழுத்தாளர்களோ அல்லது அதை எந்த கவலையும் இல்லாமல் வாசிப்பவர்களோ பெண்களின் மனதையோ அல்லது அவர்களின் வாழ்வியல் சிக்கல்களையோ முழுமையாக புரிந்து கொள்ளும் அறிவு பெறாதவர்கள் என்று அவளுக்குத் தோன்றியது.

ஜன்னல் வழியாக வானத்தை வேடிக்கை பார்த்தாள்.

என்றாவது ஒரு நாள் நானும் இறந்து விடுவேன் அப்பொழுது என் ஆத்மா அங்கே தான் இருக்கும்.

வானத்தைப் பார்த்தபடி யோசித்தாள்.

இறக்கும் வரை என் வாழ்விற்கு பொருள் இருக்க வேண்டும் என்றால் நான் என்ன செய்ய வேண்டும்?

எனக்கு இந்த வாழ்வு வெறுமையாக இருக்கிறது.

ஒரு குழந்தை வந்தால் இந்த வெறுமை மாறலாம். ஆனால் குழந்தையும் வருவதாகத் தெரியவில்லை.

கடந்த முறை அம்மா வீட்டுக்கு வந்த போது கேட்டாள்.

“என்னடி ஏதாவது விசேஷம் இருக்கா?”

அம்மா அப்படி கேட்டது அவளுக்கு ஆத்திரத்தை தூண்டியது.

“இருந்தா சொல்ல மாட்டேனா?”

“உன்னோட வயசுல எல்லாரும் ரெண்டு குழந்தைகள வச்சிட்டு இருக்காங்க” அம்மா சொல்லி முடிக்கும் முன் புவனா குறிக்கிட்டாள்.

“இப்ப எதுக்கு மத்தவங்க கூட கம்பேர் பண்றீங்க? ஒவ்வொருத்தரும் அவங்கவங்க வாழ்க்கையைத் தான் வாழ முடியும். மத்தவங்க வாழ்க்கைய வாழ முடியாது “

புவனா சொல்ல அம்மா அவளை கேலியாக ஏறிட்டாள்.

“பேச்செல்லாம் உனக்கு நல்லாத்தான் இருக்கு. ஆனா காரியத்தில ஒண்ணுமில்ல. “

புவனா அம்மாவிடம் மேற்கொண்டு ஒன்றும் பேசவில்லை. வயதிற்கும் மனமுதிர்ச்சிக்கும் சுத்தமாக சம்பந்தமில்லை என்பது அம்மாவைப் பார்க்கும்போது அவளுக்குப் புரிந்தது. ஒரு தம்பதிக்கு குழந்தைப்பேறு தாமதம் ஆகிறது என்றால் அதைக் குறித்து கவலை கொள்ள வேண்டியவர்கள் அந்த இருவர் மட்டும் தான். ஆனால் சமூகத்தில் அவர்களின் கவலையை அதிகரிக்கும் விதமாக சுற்றி இருக்கும் அனைவரும் கவலைப்படுவார்கள் அல்லது கவலைப்படுவது போல் நடிப்பார்கள். பதில் சொல்வதற்கு முடியாமல் அவர்கள் தவித்து நின்றால் இலவசமாக மருத்துவ அறிவுரை கூறுவார்கள் அல்லது அவர்களே தற்காலிக மருத்துவர்களாக மாறுவார்கள். மிக நாகரிகமாக இது அவர்களுக்கான சவால். இதை அவர்கள் சந்திப்பார்கள் ஏதாவது கேட்டால் மட்டும் நாம் உதவி செய்வோம் என்று நினைப்பவர்கள் மிகவும் குறைவு.

ஒரு நாள் புவனா அரவிந்திடம் இது பற்றி பேசிய போது அவனுக்கு கோபம் வந்தது.

“இப்ப என்ன சொல்ற? நான் கையாலாகாதவன்னா ?”

“ஐயோ நான் அப்படி சொல்லலைங்க”

“வேற எப்படி சொல்ற?”

“இல்லைங்க நம்ம ரெண்டு பேரும் டாக்டர் கிட்ட போனா..”

“நீ போகணும்னு சொல்லு. நான் ஒத்துக்கறேன். என்னை எதுக்கு கூப்பிடறே? நான் எப்படின்னு எனக்கு தெரியாதா?”

அரவிந்த் மருத்துவமனைக்கு வர முடியாது என்று தீர்மானமாக சொல்லிவிட புவனா மட்டும் தனியாக சென்றாள்.

மருத்துவமனையில் அவளுக்கு எந்த வித குறையும் இல்லை என்று சொல்லப்பட்டுவிட மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்தாள்.

“என்னங்க”

“ம்”

“நான் நல்லாத்தான் இருக்கேனாம்”

“என்ன சொல்ற? புரியல”

“ஹாஸ்பிடல்ல சொன்னாங்க.”

“சரி இப்ப என்ன அதுக்கு?”

“நீங்களும் வந்தா நல்லா இருக்கும்”

“காதோட சேர்த்து அறைஞ்சேன்னு வை. ரெண்டு நாள் எந்திரிக்க மாட்டே. எவ்வளவு தைரியம் இருந்தா என்னை டெஸ்ட்க்கு நீ கூப்பிடுவே?”

அவன் கோபமாக சொல்ல புவனாவிற்கு பயமாக இருந்தது.

இப்போது என்ன நான் தப்பாகக் கேட்டு விட்டேன்? டாக்டர் சொன்னதைத் தானே சொன்னேன்? அதற்கு ஏன் இவ்வளவு கோபப்பட வேண்டும்?

தனக்குள் யோசித்தவள் அதன் பிறகு அவனுடன் குழந்தைப்பேறு சம்பந்தமாக எதுவும் விவாதிக்கவில்லை.

விதி விட்ட வழி என்று தன் மனதைத் தேற்றிக் கொண்டாள். ஏதாவது ஒரு குட்டிக்குழந்தையைப் பார்த்தால் மட்டும் அவளுக்கு மனம் அவளிடத்தில் இருக்காது.


மாலையில் எழுந்த அரவிந்த் தன்னிடம் ஏதாவது பேசுவான் என்று எதிர்பார்த்து அவன் முகத்தைப் பார்க்க அவனோ கை கால் முகம் கழுவி உடைமாற்றி வெளியே கிளம்பினான்.

புவனா அவனை கேள்வியாகப் பார்க்க “ கடை வரைக்கும் போயிட்டு வந்துடறேன்” என்று மட்டும் சொன்னான். எந்தக் கடை என்று சொல்லவில்லை. அவன் சொல்லாமலே புவனாவிற்கு புரிந்தது.

இரவு ஒன்பது மணி ஆகியும் அவன் வீட்டிற்கு வராமல் இருக்க அவனுக்கு அழைத்தாள். வழக்கம்போல் அவன் எடுக்கவில்லை.

சரி வரும்போது வரட்டும் என்று புவனா மற்ற வேலையைப்பார்த்தாள். சிங்கில் இருந்த பாத்திரங்களைக் கழுவி வைத்துவிட்டு சமையலறையை சுத்தப்படுத்தினாள்.

பத்து மணி. புவனாவைத் தூக்கம் தழுவ காலிங் பெல் அடித்தது. அரவிந்த் வந்துவிட்டான் போல் என்று எண்ணியபடி எழுந்து போய் கதவைத் திறந்த புவனா அதிர்ந்தாள்.

வந்தது அரவிந்த் அல்ல.

கணேஷ்.

தொடரும்.
 

Author: gavudham
Article Title: மலரினும் மெல்லியது காமம் 3
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.