ஒரு ரகசிய குற்றம் 19

gavudham

Administrator
Staff member
Jan 14, 2025
109
1
18
என்னை ஏறிட்டுப் பார்த்த சுதர்சனம், "நீ என்னை இன்னும் குழப்பறே!" என்றார்.



"குழப்பலை சார்! நான் ஒண்ணு சொல்றேன்.."



"சொல்லு!"



"முதல்ல ஒருத்தன் ரூமுக்குள்ள போறான்."



"சரி!"



"கொஞ்ச நேரம் கழிச்சு நீரஜாவுக்கு போன் வருது. அதாவது, நீ எடுத்து இருக்கிற ரூமுக்கு நான் வரமாட்டேன்; இதே ஓட்டல்ல 412-ம் நம்பர் ரூம்ல நான் இருக்கேன்; அதனால, நீ என் ரூமுக்கு வான்னு போன் வருது.."



"சரி!"



"நீரஜா கிளம்பி போறா. போகும்போது அவ செல்போன் தொடர்பில் நான் இருக்கேன்.."



"சரி!"



"நீரஜா ரூமுக்குள் போன கொஞ்ச நேரம் எதுவும் செல்போன்ல எனக்கு கேட்கலை. அப்புறம், "நீ.. நீ.." ன்னு நீரஜா சொல்றது எனக்கு கேட்குது.. நான் அப்போ என்ன நெனச்சேன்னா, ரூமுக்குள்ள இருக்கிறவன் நீரஜாவுக்கு தெரிஞ்சவனாதான் இருக்கணும்னு நினைச்சேன்."



"சரி!"



"அதுக்கப்புறம் எந்த சத்தமும் கேட்கலை. அதேநேரம் ரூமுக்குள்ள நீரஜாவை கொலை செய்யறான்.."



"அதான் எப்படி? செல்போன்ல சின்ன சத்தம் கூட உனக்கு கேட்கலைன்னு சொல்றியே?"



"ஆமா சார், கேட்கலை!"



"அது எப்படிய்யா, சின்ன சத்தம் கூட வராமல் ஒரு பொண்ணைக் கொலை செய்ய முடியும்? சரி பரவாயில்லை; அது பத்தி அப்புறமா யோசிப்போம். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்தா எல்லாம் தெரிஞ்சிடும். நீ மேல சொல்லு!"



"ரூமுக்குள்ள நீரஜாவை கொலை செஞ்ச பின்னாடிதான் காமிரா வேலை செய்யாமல் போயிடுது; இல்லைங்களா?"



"ஆமாம்!"



"அந்த நேரத்துல கொலை செஞ்சவன் ரூமை விட்டு வெளியே போயிட்றான்!"



"சரி!"



"அதுக்கு அப்புறமா கொஞ்ச நேரம் பொறுத்து காமிரா வேலை செய்யுது. அப்புறமா விக்ரம் உள்ளே வர்றான்… சிரிக்காதீங்க சார்! எனக்கு தோன்றதை நான் சொல்றேன்.."



"சரி சொல்லு!"



"விக்ரம் ரூமுக்குள்ள வந்து பார்க்கிறப்ப நீரஜா கொலை செய்யப்பட்டு கிடக்கிறாள். விக்ரம், "நீரஜா! நீரஜா!" ன்னு கூப்பிட்டு பார்க்கிறான்.. அவ செத்துப் போனது தெரிந்தவுடன் ஹாண்ட் பேகை பார்க்கிறான். அதுல செல்போன் என்னோட லைன்ல இருக்கு.‌ உடனே செல்போன் இணைப்பை கட் பண்ணிட்டு அவசர அவசரமா ரூமை விட்டு வெளியே போறான். அப்போதான் நான் வராண்டாவில் ஓடி வந்து, 412-ம் எண் ரூமுக்கு போறேன்!"



"ஆக மொத்தம் நீ சொல்ல வர்றது என்னன்னா... ரூமுக்குள்ள ஒருத்தன் இருந்தான்; அவன்தான் கொலையாளி! கொலை பண்ணவன் வேற ஆள்! விக்ரம் அப்புறமா வந்தவன்; அப்படித்தானே?"



"ஆமா சார்!"



"விக்ரம் கொலை செய்யலை?"



"ஒரு யூகம் சார்!"



"எல்லாம் சரி, ஆனா.. வாய்யா, மேனேஜர்!"



மேனேஜர் ஒதுங்கி நின்று கேட்டுக் கொண்டிருந்தவர் சற்று முன்னால் வந்து, "சார்!" என்றார்.



"நீ சொல்லு, யார் பேர்ல ரூம் புக் பண்ணியிருக்கு?"



"நீரஜா பேர்ல சார்!"



"எந்த நெம்பர்லேர்ந்து?"



"அதான், முன்னே உங்க கிட்ட சொன்னேனே சார், அந்த நெம்பர்லேர்ந்து தான் ரூம் புக் பண்ணி இருக்காங்க!"



"அதாவது, நீங்க கொடுத்த நெம்பர்.. அது யாருது தெரியுமா ஜேம்ஸ் பாண்ட்? நீ கண்டுபிடிச்சு கொடுத்தியே, அந்த நெம்பர்! விக்ரமோட போன் நெம்பர்! அந்த நெம்பர்லேயிருந்து ஹோட்டலுக்கு போன் செய்து, நீரஜா பேர்ல ரூம் புக் பண்ணியிருக்கு!"



"ஐடி ப்ரூஃப் யாரோடது?"



"நீரஜாவோட வோட்டர் ஐடி சார்!" என்றார் மேனேஜர்.



"இதுக்கு என்னய்யா சொல்ற ஜேம்ஸ் பாண்ட்? நீரஜாவோட வோட்டர் ஐடி கொடுத்து, விக்ரம் போன் நெம்பரில் இருந்து ரூம் புக் பண்ணியிருக்கு! அது ஏன்?"



எனக்கும் மண்டை காய்ந்தது.



அன்றைய இரவு நீண்ட இரவாக இருந்தது எனக்கு. சுதர்சனம் என்னை போக விடவில்லை. அவர் போகச் சொல்லி இருந்தாலும் நான் போய் இருக்க மாட்டேன். எனக்குள் ஒரு பக்கம் குற்ற உணர்வு குத்திக் கிழித்தது. நீரஜாவை அநியாயமாய் சாக விட்டது என் இதயத்துக்குள் கொல்லப்படும் ஒரு பறவையின் துடிப்பு போல் துடித்துக் கொண்டிருந்தது.



சுதர்சனம் வேகமாக காரியங்களைச் செய்து கொண்டிருந்தார். ஆம்புலன்ஸ் வந்ததும் உடனடியாக நீரஜாவின் உடலை ஆஸ்பத்திரிக்கு அனுப்ப செய்தார். அந்த ஓட்டல் பணியாளர் இரண்டு பேரும் மனைவியுடன் படுக்கையில் தயாராகிக் கொண்டிருக்கும் போது ராணுவ அவசரத்துடன் அழைக்கப்பட்டார்கள். சிசிடிவி கேமரா இன்சார்ஜ் சந்திரனை, அந்த வீடியோ பதிவை திரும்பத் திரும்பப் போட்டுக் காட்டச் சொன்னார். சந்திரனும் சளைக்காமல் வீடியோவை ஓட விடுவதும், நிறுத்தச் சொன்ன இடத்தில் நிறுத்துவதும், காட்சிகளை உறையவைத்து பெரிதுபடுத்திக் காட்டுவதும், பின்னோக்கி ஓட விடுவதுமாக இருந்தான்.



"கொஞ்சம் நல்லா பார்த்து சொல்லுங்கப்பா! உங்களுக்குப் பின்னால் வர்றவனை நீங்க எப்போ பார்த்தீங்க? அவன் யார் மாதிரி இருக்கான்? விக்ரம் சாயல் தெரியுது; உண்மையில் விக்ரம்தானா?" என்று பலவிதமாய்க் கேட்டு பார்த்து விட்டார் சுதர்சனம்.



"சார், நாங்க உண்மையிலேயே கவனிக்கலை சார்! பின்னால ஒரு ஆள் யாரோ நடந்து வராங்கன்னு எங்களுக்கு தெரியாது சார்!" என்றனர்.



"சரி, ரிஷப்ஷனில் இருக்கிற கேமரா பதிவைப் போடுங்க, பார்க்கலாம்!"



சந்திரன், ரிசப்ஷன் கேமரா பதிவை மாலை ஆறு மணிக்கு முன்பிருந்து ஓட விட்டான்.



மாலை - 5:58-க்கு நான் 'கோல்டன் ஸ்பாட்' ஹோட்டலுக்குள் வருகிறேன். செல்போனில் அவர்கள் அனுப்பிய மெசேஜ் காட்டி, 305, 306-ம் எண் அறைகளின் சாவியை வாங்கிக் கொண்டு செல்கிறேன்.



6:05-க்கு நீரஜா வருகிறாள். அவளை உயிருடன் பார்த்ததும் எனக்கு கண்கள் கலங்கியது. யாராவது, இது வெறும் கனவுதான்; எழுந்திருப்பா! என்று சொல்ல வேண்டும் போல் மனது தவித்தது. உள்ளே வந்தவள் யாரிடமும் விசாரிக்காமல் நேராக அறைக்குள் செல்கிறாள். நான் கண்களின் கசிவை மறைத்துக் கொண்டேன்.



6:20-க்கு விக்ரம் வருகிறான்.‌ வெள்ளைச் சட்டை, க்ரே கலர் பேண்ட் அணிந்திருந்தான். அப்போது பணியாளர் ஒருவர் அவன் மீது தவறுதலாக மோதிக் கொண்டு, ஸாரி சொல்வது போல் கையமர்த்தி பேசுகிறார். விக்ரம் அவரிடம் பேசிவிட்டு, ஏதோ கேட்க, பணியாளர் மேலே கை காட்டுகிறார்.



6:22-க்கு விக்ரம் மேலே போகிறான்.



அவ்வளவுதான்! அதற்கு பிறகு, சந்தேகப்படும் படி யாரும் வரவும் இல்லை; போகவும் இல்லை.



இப்போது, முதல் மாடி வராண்டாவில் உள்ள கேமிராவை ஓட வைத்தனர்.



6:11-க்கு நீரஜா முதல் மாடி வராண்டாவில் நடந்து, 412-ம் எண் அறைக்குள் நுழைகிறாள்.



6:24-க்கு விக்ரம் வருகிறான். ரூமுக்குள் நுழைகிறான்.



6:27-க்கு விக்ரம் வெளியே வந்து நடக்கிறான்.



6:28-க்கு நான் காமிராவில் ஓடி வருவது தெரிகிறது.



மொத்த முக்கிய காட்சிகள் இவ்வளவுதான். ஆனால், இதில் இன்னொரு விநோதம் என்னவென்றால், 6:27- மற்றும் 6:28 மணிக்கு வராண்டாவில் நடந்து போன விக்ரம், மீண்டும் ரிசப்ஷன் கேமிராவில் பதிவாகவில்லை. அதாவது, விக்ரம் ஓட்டலை விட்டு வெளியே போகும் காட்சியில் பதிவாகவில்லை.



"ஓட்டலுக்கு உள்ளே வரும் போது ரிசப்ஷன் கேமிராவில் விக்ரம் பதிவாகி இருக்கான்; திரும்பி வெளியே போகும் போது இல்லை. ஓட்டலுக்கு பின்புறம் ஏதாவது வழி இருக்கா, என்ன?" என்றார் சுதர்சனம்.



"ஒரு சின்ன கேட் இருக்கு சார்! ஓட்டல்ல, லாட்ஜ் ரூம்ல சேர்ற குப்பைகளை எல்லாம் அந்த வழியாதான் வெளியே எடுத்துட்டு போய் கொட்டுவாங்க!"



மேனேஜர் சொல்லவும் சுதர்சனம், "சரியா போச்சு! இதை ஏன்யா முன்னாடியே சொல்லலை?" என்று கோபமாகக் கேட்டார்.



"அதைப் பத்தி நீங்க கேக்கவே இல்லையே சார்!"



"யோவ், ஜேம்ஸ் பாண்டு! அந்த விக்ரமை பிடிச்சா கேஸ் முடிஞ்சுதுய்யா! அவன்தான் கொலைகாரன்!" என்றார்.



"அப்போ… விக்ரம் ரெண்டாவது முறை ரூமுக்கு வந்ததற்கான காரணம் என்ன சார்?"



"முதல்ல ரூமுக்குள்ள போறானா? அப்புறம் நீரஜா ரூமுக்குள்ள போறாளா…?"



"சார், ஒரு நிமிஷம்! முதல்ல ரூமுக்குள்ள போறது விக்ரமான்னு தெளிவா தெரியலை!" என்றேன் நான்.



"விக்ரம்தான்! அவனைத் தவிர, அதுக்கு முன்னாடியும் சரி, பின்னாடியும் சரி வேற யாரும் போன மாதிரி தெரியலை. விக்ரம் ரூமுக்குள்ள போறான்; அதுக்கு அப்புறம், நீரஜா ரூமுக்குள்ள போனதும் கொலை பண்றான்; அப்போ கேமிரா வேலை செய்யலை! அந்த நேரத்துல விக்ரம் எதுக்காகவோ வெளியே போயிருக்கலாம்."



"அதான், எதுக்கு வெளியே போய், திரும்பி வரணும்? ஒரு கொலையை பண்ணிட்டு, இப்படியா ஒருத்தன் போய், போய் வந்து தன்னை அடையாளப்படுத்திக்குவான்?"



"நீ கேக்கறதும் கரெக்ட்தான் ஜேம்ஸ் பாண்ட்! ஒரு வேளை இப்படி இருக்கலாமே!"



"எப்படி சார்?"



"வெளியே போன விக்ரம், எதிர்ல யாரோ வர்றதைப் பார்த்திருக்கலாம்; அல்லது, ரூம்ல எதையாவது மறந்து வெச்சுட்டு, அதை எடுக்க திரும்பவும் ரூமுக்கு வந்திருக்கலாம். அவன் கெட்ட நேரம், திரும்பி வரும் போது கேமிரா வேலை செய்யுது. ரூமுக்குள்ள வந்துட்டு கொஞ்ச நேரம் கழிச்சு வெளியே வந்து பின்பக்கமா போயிட்டான்!"



"இதுல இன்னொரு விஷயம் இருக்கு சார்!"



"என்ன?" என்று புருவம் உயர்த்தினார் சுதர்சனம்.



"விக்ரம்தான் கொலையாளின்னா, அவன் எந்த ஆயுதத்தையும் எடுத்துட்டு போற மாதிரி தெரியலையே சார்?"



"கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை நீ பார்த்தே இல்லை? அதை சுலபமா இடுப்புல சொருகி எடுத்துட்டு வரமுடியும்!"



"லாஜிக் எல்லாம் சரியாத்தான் இருக்கு. ஆனா, சார்..."



"நீ வேற குழப்பாதைய்யா ஜேம்ஸ் பாண்டு!"



"குழப்பலை சார்! விக்ரம்தான் கொலைகாரன்னு தீர்மானம் பண்ணிட்டா.."



"அவன்தான்யா கொலைகாரன்! சந்தேகமே இல்லை!" என்று உறுதியாக கூறினார் சுதர்சனம்.
 

Author: gavudham
Article Title: ஒரு ரகசிய குற்றம் 19
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.