ஒரு ரகசிய குற்றம் 10

gavudham

Administrator
Staff member
Jan 14, 2025
109
1
18
என்னை நெருங்கும் விக்ரமையும் அவன் கையிலிருந்த நீளமான கத்தியையும் பார்த்தேன். ஒரு சக்தி வாய்ந்த மின்னல் ஒன்று அந்த கத்தியில் உறைந்திருப்பது போல் அது பளபளப்பாக மின்னியது.



"எதுக்கு இப்போ கத்தி எல்லாம் எடுத்துக் காட்ற?" நான் கேட்டேன்.



"அவனுக்கு போன் பண்ணி குறிப்பிட்ட இடத்துக்கு வரச் சொல்லு நீரஜா!" என்றான் விக்ரம்.



"எதுக்கு வரச் சொல்லணும்? எங்க வரச் சொல்லணும்?"



"ஒரு நாளைக்கு நீ வேணும்னு சொன்னான் இல்லையா?"



"ஆமாம்."



"அதுக்குத்தான் வரச் சொல்லு. ஒரு தனியான வீடு... ஒதுக்குப்புறமாக இருக்கிற வீடு ஒண்ணு வாடகைக்கு எடுத்துடலாம்."



"எதுக்கு வாடகைக்கு வீடு எடுக்கணும்?"



"அங்க அவனை வர வெச்சு போட்டுத் தள்ளிடலாம்." என்று விக்ரம் சொல்லும் போது அவன் நெற்றி நரம்புகள் துடித்தன.



நான் பேசாமல் இருந்தேன்.



"என்ன நீரஜா, நீ கூப்பிட்டா அவன் வருவான் இல்லை? அவனை வர வெச்சு தீர்த்துக் கட்டிவிடலாம்!"



"என்னால இதை பண்ண முடியும்னு நீ நினைக்கிறாயா விக்ரம்?"



"உன்னால அவனுக்கு போன் பண்ணி வரச் சொல்ல முடியும் இல்ல? அது உன்னால முடியும்! அவன் வந்ததும் மத்ததை நான் பார்த்துகிறேன்!"



"அவனைக் கொலை பண்ணலாம்னு சொல்றியா?"



"ஆமாம்! எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு நான் அவனைக் கொலை பண்ணினாதான் என் ஆத்திரம் அடங்கும்!"



நான் அமைதியாகவே இருந்தேன். விக்ரம் இன்னும் ஆத்திரம் அடங்காமல் பேசிக்கொண்டிருந்தான்.



"அவனுக்கு பணம் வேணும்னா எவ்வளவு வேணும்னாலும் கொடுத்திடலாம். பணம் கொடுக்க உன்னால முடியும். ஆனா, அவன்…" பயங்கரமான ஒரு கெட்ட வார்த்தையை விக்ரம் பயன்படுத்தினான். "உன்னையும் இல்ல கேட்டிருக்கான். இது ஒரு நாளோடு முடியிற பிரச்சனையா எனக்கு தெரியல. இவ்வளவு மட்டமான புத்தி இருக்கிறவன் திரும்பத் திரும்ப வேற ஏதாவது ஒரு ரூபத்தில் நமக்கு பிரச்சனையை கொடுத்துட்டே தான் இருப்பான். இதை முடிவுக்குக் கொண்டு வரணும்னா நாமும் துணிச்சலான ஏதாவது ஒரு முடிவு எடுத்துதான் ஆகணும்!"



"அதுக்காக கொலை பண்றது பெரிய கிரிமினல் குற்றம். இதுல நாம மாட்டிகிட்டா நம்ம லைஃப்பே பாழாகிடும். அதில்லாம கொலை பண்றதுல எனக்கு விருப்பம் இல்லை!"



"ஆனா எனக்கு இருக்கு. நீ அவனைப் பத்தி சொல்லச் சொல்ல அவனைக் கொல்லணும்ங்கிற வெறி, ஆத்திரம் வருது. பக்காவா திட்டம் போட்டு, அவனை வர வெச்சு, அவனைக் கொல்லலாம். இருக்கவே இருக்கு, உன்னோட கார்; இல்லன்னா, எனக்குத் தெரிஞ்சவங்க எத்தனையோ பேர் வாடகைக்கு கார் விடறாங்க; அவங்ககிட்ட ஒரு கார் வாடகைக்கு எடுத்துக்கலாம். கொலை பண்ணதும் கார்ல தூக்கி போட்டுட்டு போய் ரயில்வே ட்ராக்கில... இல்லன்னா, கூவம் ஆத்துல... எங்கேயாவது போட்டுடலாம்."



விக்ரம் இவ்வளவு ஆவேசப்பட்டு நான் பார்த்ததில்லை. நாக பாம்பின் தலையில் அடித்தது போல் சீறினான்.



"இல்ல விக்ரம், இது சரியா வராது." என்றேன்.



"ஏன் சரியா வராது? இந்த மாதிரியான பிளாக்மெயில் பண்றவனை எல்லாம் இப்படித்தான் தண்டிக்கணும்."



"அப்படி தண்டனை தர்றதா இருந்தா எனக்கும்தான் தண்டனை தரணும் விக்ரம்."



"உனக்கு எதுக்கு தண்டனை?"



"தப்பு செஞ்சா தண்டனை அனுபவிக்கணும் இல்ல? புருஷனுக்கு நம்பிக்கை துரோகம் பண்ற எனக்கும் சேர்த்துதான் தண்டனை கொடுக்கணும்!"



அடிபட்டவன் போல் பார்த்தான் விக்ரம்.



"அப்போ என்ன பண்ணலாம்ங்கிற? பிளாக்மெயில் பண்றவன் சொல்ற மாதிரி கேட்க போறியா?"



நான் கோபமாக விக்ரமை ஏறிட்டு பார்த்தேன்.



"சொல்லு நீரஜா, என்ன பண்ணப் போற? ஒரு நாளைக்கு அவன் கூட போய் இருக்கப் போறி -"



நான் அவன் பேச்சை முடிக்க விடவில்லை. அங்கிருந்த தலையணையைத் தூக்கிக் கோபமாக அவன் மீது எறிந்தேன்.



"நான் அப்படித்தான் முடிவெடுப்பேன்னு நினைச்சியா? சொல்லுடா, ஒரு நாளைக்கு அவன் கூட இருக்கிறதுக்கு நான் எப்படி சம்மதிக்க முடியும்?"



"அவனை கொலையும் பண்ணக்கூடாது; அவன் சொல்றதையும் நீ நிறைவேற்றக் கூடாது; ரெண்டும் இல்லாம வேற என்ன வழி? இதுக்கு நீயே பதில் சொல் நீரஜா!"



விக்ரமின் கோபம் சற்று குறைந்திருந்தது. எனக்கு அப்போது எந்த யோசனையும் இல்லை. நான் யோசிக்கும் திறனையே இழந்து விட்டிருந்தேன்.



"இது ரெண்டும் இல்லாம நீயே ஒரு யோசனை சொல்லு விக்ரம்!"



நான் அவனை இமைக்காமல் பார்த்து சொன்னேன்.



அவன் ஒரு பெருமூச்சு விட்டான். அவன் தன் முகத்தின் தசைகளைத் தளர்த்தி கொண்டு, " நான் ஒரு யோசனை சொல்றேன்!" என்றான்.



"என்ன யோசனை?"



"நான் ஏற்கனவே உன்கிட்ட சொன்ன யோசனைதான்!"



"ஏற்கனவே என்ன யோசனை சொன்னே?"



"நீ உன் ஹஸ்பண்டை டிவோர்ஸ் பண்ணிட்டு என் கூட வந்துடு. இந்த பிரச்சனைக்குத் தீர்வு இதுதான்! என்ன சொல்ற?"



நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.



"என்ன சொல்ற நீரஜா? இது ரொம்ப சிம்பிள்! ஒரு லெட்டர் எழுதி வச்சுட்டு, உன் துணிமணிகளை எடுத்துக்கிட்டு, சுவாமிநாதனுக்கு டாட்டா காட்டிட்டு கிளம்பி வந்துட்டே இரு! நாம ரெண்டு பேருமே ஒரு வக்கீலை நேரா போய் சந்திப்போம். வக்கீல் மூலமா டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்புவோம். யார் கேட்டாலும் நான் விக்ரமைதான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு தைரியமா சொல்லு. அப்போ உன்னை பிளாக்மெயில் பண்ணவன் என்ன பண்ணுவான்? அவனால உன்னை ஒண்ணும் பண்ண முடியாது. ஆனா, நாம அவனை ஏதாவது பண்ணலாம். அந்த போன் நம்பரை கொடுத்து போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்தா அவங்க பார்த்துக்குவாங்க. பிளாக்மெயில் பண்ணவன் இதை நிச்சயம் எதிர்பார்க்கவே முடியாது! நான் அவன் முகத்தை பார்க்கணும் நீரஜா! அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விடணும்! அவன் முகத்துல நான் ரத்தத்தை பார்க்கணும்! அப்பதான் என் ஆத்திரம் அடங்கும்! இப்ப நீதான் தைரியமா முடிவு எடுக்கணும் நீரஜா!"



நான் இன்னும் அமைதியாகவே இருந்தேன். என் மனதில் விக்ரமை திருமணம் செய்து கொள்ளும் யோசனை இதுவரைக்கும் எனக்கு இல்லை. அவன் எனக்குள் வாசிக்கப் படாமல் இருந்த புத்தகத்தின் சில பக்கங்களைத் திறந்து படித்திருக்கலாம். எழுதப்படாத கவிதை; மீட்கப்படாத ராகங்கள் என்று எனக்குள் இருந்த என்னை எனக்குத் தரிசனம் செய்ய வைத்திருக்கலாம். விக்ரம் அழகானவன்.‌ திண்மையானவன். ஆண்மையின் அடையாளம் அவன்.‌ என்னை திருப்தி படுத்தினான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், இதுவே அவனை திருமணம் செய்து கொண்டு வாழ்நாள் முழுக்க அவனுடன் இருப்பதற்கு போதுமான காரணங்களாக எனக்குத் தெரியவில்லை. என்னைப் போலவே அவனை பல பெண்கள் விரும்பி இருக்கலாம்; விக்ரமும் தன்னை அவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்திருக்கலாம்.‌ அதில் எந்த சந்தேகமும் இல்லை. என்னிடமிருந்து பெற்ற பணத்தில் இருந்தும் கூட பல பெண்களின் உடலில் தன் முரட்டுத்தனத்தின் ஆதிக்கத்தைச் செலுத்தி இருக்கலாம். அவன் சுதந்திரத்தை இதுவரை நானும் அனுமதித்து இருக்கிறேன். ஆனால் திருமணத்திற்கு பிறகு அவன் சுதந்திரத்தை என்னால் எப்படி அனுமதிக்க முடியும்? இதுவரை என் சொத்தின் மதிப்பு எவ்வளவு என்று எனக்கே தெரியாது. திருமணத்திற்கு பிறகு என் உடலின் மீது செலுத்திய ஆதிக்கத்தை என் சொத்தின் மீதும் செலுத்த மாட்டான் என்பது என்ன நிச்சயம்?



"என்ன நீரஜா, எதுவும் பேசாம நீ பாட்டுக்கு மௌனமா இருக்கே? ஏதாவது சொல்லு! நீ சொல்றதுலதான் எல்லாமே இருக்கு!" என்றான் விக்ரம்.



"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை விக்ரம்." என்றேன்.



நான் சொல்வதை கேட்டு அவன் என்னை முறைத்தான். அவன் கன்னச் சதைகள் இறுகுவதை பார்த்தேன். கைவிரல்களை இறுக்கமாக மூடி இருந்தான். உதடுகள் வார்த்தைகளை வெளிப்படுத்த துடித்தன. பிறகு, தன்னை கொஞ்சம் தளர்த்திக் கொண்டான்.



"அப்போ நீ இன்னும் என்னை நம்பலை இல்லையா நீரஜா?" என்று நீண்ட பெருமூச்சு விட்டான். "ஆமா.. நீ என்னை நம்பலை!" என்று பலமுறை சொன்னான், தனக்குத்தானே! கட்டிலில் அவனால் இயல்பாக உட்கார்ந்திருக்க முடியவில்லை. கடைசியில் பதட்டத்துடன் "நீரஜா உனக்கு புரியுதா, அவன் உன்னை பிளாக்மெயில் பண்றான்னு?" என்றான். அப்போது அந்த வார்த்தைகளில் விரக்தி வெளிப்பட்டது.



"ஆமா, அவன் என்னை பிளாக் மெயில் பண்றான். அதை வெச்சு நீ என்னை பிளாக் மெயில் பண்ற!"



"நானா? நான் பிளாக்மெயில் பண்றனா?" என்றான் அதிர்ச்சியுடன்.



"ஆமா! இப்ப நீதான் என்னை பிளாக் மெயில் பண்ணிட்டிருக்கே! யாரோ ஒருத்தன் பிளாக்மெயில் பண்றான்ங்கிறதுக்காக சுவாமியை டிவோர்ஸ் பண்ணிட்டு என் கூட வான்னு சொல்றியே, இது கூட ஒரு விதத்தில் பிளாக்மெயில்தான்! சுவாமியை நான் டிவோர்ஸ் பண்றது; உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறது; இதைத் தவிர வேற எதாவது யோசனை இருந்தா சொல்லு கேக்கறேன்."



"அப்போ… உனக்குத் தினவெடுக்கும் போதெல்லாம் உன் முதுகை சொறிஞ்சு விடறதுக்குத்தான் என்னைப் பயன்படுத்திக்கிட்டியா?"



"என்ன விக்ரம் இப்படி அசிங்கமா பேசுற?"



"என்ன அசிங்கமா பேசறேன்? நீ பண்றது உனக்கு அசிங்கமா தெரியலையா?"



"ஆமா நான் பண்ணது அசிங்கம்தான்! எனக்கு இதுவும் வேணும்; இன்னமும் வேணும்! நான் கிளம்பறேன்." என் ஹேண்ட் பேகை சேகரித்துக் கொண்டு நான் எழுந்தேன்.



"நீரஜா, நில்லு! நான் சொல்றதைக் கேளு! போகாதே! அது உனக்குதான் பிரச்சனை!"



"என்ன பிரச்சனை?" நான் நின்று திரும்பிக் கேட்டேன்.



"நீ மட்டும் எப்படி இந்த பிரச்சனையை தனியா சமாளிப்பே?"



"இனிமே அது என் பிரச்சனை! நான் பார்த்துக்கிறேன்!"



"ன்னு சொல்லிட்டு வந்துட்டேன். இனிமே இந்த பிரச்சினைக்கு நீங்கதான் ஒரு தீர்வு சொல்லணும் மாதவன் சார்!"



நீரஜா அனைத்தையும் என்னிடம் சொல்லி விட்டு என்னைப் பார்த்தாள். நான் தண்ணீர் பாட்டிலை அவள் பக்கம் நகர்த்தி வைத்தேன். அவள் பாட்டிலைத் திறந்து குடித்தாள். பதட்டத்தில் அவள் கழுத்தின் வழியாக தண்ணீர் வழிந்து கனத்த ஸ்தனங்களுக்குள் சென்று நனைந்தது. நான், அவள் தண்ணீர் குடித்து முடிக்கும் வரை பொறுமையாய் இருந்தேன். பிறகு என் செல்போனுக்கு ஷாலினி அனுப்பியிருந்த மெசேஜை அவளுக்குக் காட்டினேன்.



"என்ன இது?" என்றாள்.



"நீங்க கண்டுபிடிக்கச் சொல்லிக் கொடுத்த செல்போன் நம்பரின் சொந்தக்காரர்கள்! முதலாவது இருப்பது விக்ரம் குமார்!"



நீரஜாவின் கண்கள் பயத்தில் விரிந்தது.
 

Author: gavudham
Article Title: ஒரு ரகசிய குற்றம் 10
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.